சென்னை: தாம்பரம் விமானப்படை தளத்தில் உள்ள பயிற்சி பள்ளியின் 75வது ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி போர் விமானங்கள் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய விமானப்படை தளபதி ஏர்சீப் மார்ஷல் வீ.ஆர்.சவுத்ரி பங்கேற்று, போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் ஹால், எச்டி2, ப்லட்டஸ், கிரண், எம்ஐ17, டோர்னியர் உள்ளிட்ட விமானங்களின் சாகசங்கள் நடத்தப்பட்டது. இதில், 9 ஆயிரம் அடி உயரத்தில் வந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து 9 விமானப்படை வீரர்கள், மூவர்ண கொடி நிறத்திலான பாராசூட் மூலமாக கீழே குதித்து தரையிறங்கும் சாகசத்தை செய்து அசத்தினர்.
அதேபோல் போர் விமானங்கள் வானில் நேராக சென்று, பின்னர் செங்குத்தாக மேல் ஏறுவதும், தலைகீழக பறப்பது என பல்வேறு சாகசங்களை செய்து காட்டினர். இவற்றை விமானப்படை உயரதிகாரிகள் மற்றும் வீரர்களின் குடும்பத்தினர் கண்டு கைத்தட்டி ஆரவாரம் செய்து விமானிகளை உற்சாகப்படுத்தினர். நிகழ்ச்சியில் விமானப்படையின் தளபதி வீ.ஆர்.சௌத்ரி பேசுகையில், ‘‘விமானப்படையில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். ஏஐ என்று சொல்லக்கூடிய செயற்கை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதன் மூலம் விமானங்களின் திறனும், பறக்கும் திறனும் மேம்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது’’ என்றார்.
The post பயிற்சி பள்ளியின் 75வது ஆண்டு நிறைவு விழா தாம்பரத்தில் போர் விமானங்கள் சாகச நிகழ்ச்சி appeared first on Dinakaran.